search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறைகாற்றுடன் பலத்த மழை"

    காட்டுமன்னார்கோவிலில் நேற்று சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று வீசியதால் காட்டு மன்னார் கோவில் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து நுழைவு வாயிலில் உள்ள கதவின் மீது விழுந்தது. திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளேரி என்ற இடத்தில் புளிய மரமும், காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலை ஓரம் இருந்த வேப்ப மரமும் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

    இதேபோல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். இதன்பிறகு போக்குவரத்து சீரானது. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஒருசில கிராமங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

    இதேபோல் பெண்ணாடம், திட்டக்குடி, ஆவினங்குடி, தொழுதூர், ராமநத்தம், ஆவட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நின்றது. மேலும் பெண்ணாடம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் பெண்ணாடம் பகுதிகளில் உள்ள கடைவீதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வடிகால் வாய்க்கால்களை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×